அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான யூக பேர வர்த்தகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்
தருமபுரி, ஜன. 8: அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வுக்கு காரணமான யூக பேர வர்த்தகத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல
தருமபுரி, ஜன. 8: அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வுக்கு காரணமான யூக பேர வர்த்தகத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியது:
இளைஞர்கள், மகளிரின் ஆற்றல் மிக்க சக்தியை உணர்ந்து பேரவைத் தொகுதி வாரியாக அவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுவரை, 28 தொகுதிகளில் பயிற்சி வகுப்பு நடந்துள்ளது.
29-வது தொகுதியாக பென்னாகரத்தில் வரும் 22-ம் தேதி பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மருத்துவக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. நுழைவுத் தேர்வு இல்லாததால் கிராமப்புற மாணவ, மாணவியர் பலர் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் தடையாணை பெறுவதோடு நிற்காமல், தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து நுழைவுத் தேர்வை அனுமதிக்காமல் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
உணவு உற்பத்தி குறைந்து, விளைநிலங்களும் குறைந்துவரும் சூழலில் விவசாய மின்இணைப்புகள் பெற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். மின்இணைப்பு பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் நூல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தி ஏற்றுமதியை தடை செய்து, குறைந்த விலையில் நூல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
வெங்காயம், காய்கறிகள், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமான யூகபேர வர்த்தக முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார் அவர்.
மாநில துணைப் பொதுச் செயலர் அ.சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சா.பெ.வெங்கடேஸ்வரன், வன்னியர் சங்க துணைத் தலைவர் பாடி செல்வம், கட்சியின் மாவட்ட செயலர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.