ராமதாஸ் - சசிகலா கூட்டணி? இன்று சந்திப்பு!
ராமதாஸ் - சசிகலா கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை சந்தித்து சசிகலா இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தங்கள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாமக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.
கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவின் விசாரணை தேர்தலுக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் ராமதாஸுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து விவாதிக்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் ராமதாஸ் புதன்கிழமை ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதனிடையே, அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கடந்த வாரம் தொடங்கியிருந்தார்.
இந்த நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சசிகலா இன்று ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.