தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 4 ஆடுகளை வளர்த்து, சாதனை பண்ணையாளராக உருவெடுத்த திருநங்கை, திடீரென அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே சோளப்பாடியைச் சேர்ந்தவர் கு.தனலட்சுமி (26). திருநங்கையான இவர், கடந்த 2011-ஆம் ஆண்டில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 4 வெள்ளாடுகளைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, ஆடு வளர்ப்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்ட தனலட்சுமி, அடுத்த 5 ஆண்டுகளில், 70 ஆடுகளாக வளர்ந்து சாதனை பண்ணையாளராக உருவெடுத்தார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவரை நேரில் சென்று பாராட்டினர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தனலட்சுமி தனது வீட்டருகில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவர் அரளி விதையை அரைத்துக் குடித்தது தெரிய வந்தது. மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி தனலட்சுமி உயிரிழந்தார்.
இதுகுறித்து இண்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீராத வயிற்று வலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், சாதனை பண்ணையாளராக உருவெடுத்த ஒரு திருநங்கை சாதாரண வயிற்று வலிக்காகவா தற்கொலை செய்து கொண்டார்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.