தருமபுரி பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கியதில் பயணி ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்திலிருந்து ஒசூர் வழியாக பெங்களூரு செல்லும் பேருந்து, தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக வியாழக்கிழமை வந்து நின்றது. இப்பேருந்தை ஓட்டுநர் ரங்கராஜ் ஓட்டி வந்தார். அப்போது, அப்பேருந்தில் இருந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த மாதையன் (61), ஓட்டுநரிடம் ஏதோ விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அப்போது, ஓட்டுநர் திடீரென கம்பியால் மாதையனை தாக்கியுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்தார். இதைக் கண்ட, பேருந்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஓட்டுநரின் இச்செயலைக் கண்டித்து பேருந்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த தருமபுரி நகரப் போலீஸார், நிகழ்விடத்துக்கு வந்து காயமடைந்தவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.