பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
மலைவாழ் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மலைவாழ் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அந்தக் கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம், சிட்லிங் ஊராட்சி முள்ளிக்காடு கிராமத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலர் பி.பெருமாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட வாச்சாத்தி- கலசப்பாடி வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்தச் சாலையை, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. இதனால் மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இதேபோல், புதுவளவு-சூலக்குறிச்சி, கோம்பை-எருமாங்கடை, கோட்டப்பட்டி- சிட்லிங் சாலைகள் பழுதாகியுள்ளன. எனவே, மலைவாழ் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் அனைத்துச் சாலைகளையும் சீரமைப்பு செய்ய வேண்டும்.
எஸ்.டி ஜாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு மாத காலத்துக்குள் ஜாதிச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
மேலும் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பொ.பா.ராமசாமி, மாநிலச் செயலர் டி.வேலாயுதம், மாநிலப் பொருளாளர் ஆர்.மாது, தருமபுரி மாவட்டச் செயலர் ஏ.வடிவேல், ஒன்றியத் தலைவர் லட்சுமணன், கிளைத் தலைவர் ஏ.அன்னப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.