அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் முறையை கைவிட்டு, காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைர் சி.அங்கம்மாள், அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016 பிப்ரவரி மாதம் பேரவையில், சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு அமல்படுத்தும்போது, சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து, காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஆனால், தமிழக அரது தற்போது மீண்டும் சிறப்பு காலமுறை ஊதியத்தையே வழங்கியுள்ளது. இது எங்களுக்கு அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் சுமார் ஏழரை மணி நேரம் பணியும், கூடுதலாக ஐசிடிஎஸ் திட்டப் பணி, தேர்தல் பணி, சுகாதாரப் பணி என பல்வேறு பணிகளை செய்துவரும் எங்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. எனவே, எங்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.