சமூக புறக்கணிப்பு செய்பவர்கள் மீது, நடவடிக்கைக் கோரி, தலித் மக்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
தருமபுரி மாவட்டம், வே.முத்தம்பட்டி அருகேயுள்ளது மங்கலம் கொட்டாய் கிராமம். இக் கிராமத்தில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இக் கிராமத்தில், வசிக்கும் தலித் மக்கள், தேநீர் கடை, சிகை திருத்தம் செய்யும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தங்கள் மீது சமூக புறக்கணிப்பில் மாற்று சமூகத்தினர் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை பலமுறை நடத்தியும் தொடர்ந்து தங்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்கிறது. மேலும், தங்களது சுக, துக்க நிகழ்ச்சிகள், திருவிழாக்களின் போது, கிராமத்தில் விளம்பர பதாகைகள் வைப்பது, மின் விளக்குகள், அலங்கார தோரணங்கள் கட்டவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தங்கள் மீது தாக்கல் தொடுக்கின்றனர். மேலும், கடந்த ஏப்.14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட முறையாக காவல் துறையிடம் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் தங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட வில்லை. இதனால், தங்கள் மீது தாக்கல் நடவடிக்கை தொடர்கிறது எனக் கூறி, அக்கிராம மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஜானகிராம், த.காந்தி மற்றும் போலீஸார், விடுதலைச் சிறுத்தைகள் மண்டலச் செயலர் பொ.மு.நந்தன் மற்றும் மங்கலம் கொட்டாய் கிராம மக்களிடம் சமாதனப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என காவல் துறையில் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அவர்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மீண்டும் கிராமத்திற்கு திரும்புவோம், அதுவரை ஆட்சியர் அலுவலகத்திலேயே இருப்போம் என்றனர். இதனால், காவல் துறையினருக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் உறுதியளித்தார். இதையேற்ற, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் புகார் மனு அளித்தனர்.