"நிகழாண்டில் ரூ. 3.28 கோடியில் 10 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள்'
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 3.28 கோடியில் 10 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 3.28 கோடியில் 10 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
காரிமங்கலம் வட்டம் பைசுஅள்ளி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை குடிமராமத்துப் பணிகளைத் தொடங்கிவைத்து அவர் கூறியது:
மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள கடந்த ஆண்டு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 21 ஏரிகளில் ரூ. 1.58 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுள்ளன.
தற்போது 2018-19ஆம் ஆண்டில் 10 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள ரூ. 3.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் பணியாக பைசுஅள்ளி ஏரியில் ரூ. 24 லட்சத்தில் பணிகள் தொடங்கப்படுகின்றன.
தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி கிருஷ்ணாபுரம் பெரிய ஏரி ரூ. 23.90 லட்சத்திலும், கிருஷ்ணாபுரம் சின்ன ஏரி ரூ. 22.70 லட்சத்திலும், நூலஅள்ளி ஏரி ரூ. 23.10 லட்சத்திலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், பாலக்கோடு பைசுஅள்ளி ஏரி ரூ 24 லட்சத்திலும், ஜெர்தலாவ் ஏரி ரூ. 40 லட்சத்திலும், தாமரை ஏரி ரூ. 40.35 லட்சத்திலும், பாப்பாரப்பட்டி பெரிய ஏரி ரூ. 23.30 லட்சத்திலும், தருமபுரி மாதேமங்கலம் ஏரி ரூ. 46.65 லட்சத்திலும், இலளிகம் ஏரி ரூ. 58.85 லட்சத்திலும் குடிமராமத்து மேற்கொள்ளப்படவுள்ளது.
ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், ஏரியைத் தூர்வாரி கரையைப் பலப்படுத்துதல், வழங்கு வாய்க்கால் மற்றும் உபரிநீர் வெளியேறும் வழிகளை சீரமைத்தல், மதகு மற்றும் கலிங்கினை சீரமைத்தல், பாசன வாய்க்காலை மேம்படுத்துதல் போன்ற பணிகள் இதில் மேற்கொள்ளப்படும்.
விவசாயப் பயன்பாட்டுக்காக வண்டல் மண் வழங்கப்படும். இப்பணிகளால், ஏரிகளின் அருகே உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 838.28 ஹெக்டேர் பாசன வசதி பெறும். பைசு அள்ளி ஏரிக்கு பஞ்சப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் வர வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரி வருகின்றனர். பஞ்சப்பள்ளி அணையில் இருந்து உபரிநீரை ஜெர்தலாவ் ஏரிக்கு கொண்டு வந்து, அதிலிருந்து பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது பஞ்சப்பள்ளி அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கிருஷ்ணகிரி அணையாளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதேபோல, எண்ணேகொல்புதூரிலிருந்து அம்மன் ஏரி முதல் நரியணஅள்ளி ஏரி, தும்பலஅள்ளி அணை வரை 33 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது என்றார் அன்பழகன்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் மெய்யழகன், உதவிப் பொறியாளர்கள் ரத்தினவேல், சாம்ராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர். அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.