"வாழ்க்கை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'
வாழ்க்கை சிறியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு புரிந்து கொண்டால் இருக்கும் குறுகிய
வாழ்க்கை சிறியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு புரிந்து கொண்டால் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்றார் தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியின் பேராசிரியர் கு. சிவப்பிரகாசம்.
தருமபுரி மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 22ஆவது இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் "மரணத்தில் மிதக்கும் சொற்கள்' என்ற சிறுகதை நூல் குறித்து அவர் மேலும் பேசியது:
மரணம் தவிர்க்கவே முடியாதது. என்றாவது ஒருநாள் நாம் இறந்தே ஆக வேண்டும். ஆனால், அந்த மரணம் நெருங்கும் தருணம் அறியும்போது பலரும், இன்னும் சில காலம் வாழ்ந்தால் அதைச் செய்துவிடலாமே, இதைச் செய்துவிடலாமே என ஏக்கமுற்றிருப்பர்.
எனவே, மரணம்தான் வாழ்க்கையைப் புரிய வைக்கிறது. அர்த்தமுள்ளதாக்குகிறது. எவ்வித வேறுபாடுகளின்றியும் வாழ நமக்குக் கற்றுத் தருகிறது. வாழ்க்கை சிறியது என்பதைப் புரிந்து கொண்டால் அந்தக் குறுகிய காலத்துக்குள் ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
"மரணத்தில் மிதக்கும் சொற்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பில் 9 சிறுகதைகள் உள்ளன. இதில் 6 சிறுகதைகள் இஸ்லாமியர்களின் வாழ்க்கை சார்ந்தது. கற்பனை கலந்த அர்ஷியாவின் மொழிநடை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது என்றார் சிவப்பிரகாசம்.
கூட்டத்துக்கு ஆசிரியர் கலாவதி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் சுஷீல்குமார் ஒருங்கிணைத்தார். நடைபழகு குழுவின் சிறார்கள் நன்றி கூறினர்.