தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நெருப்பூர் அருள்மிகு முத்தராயர் திருக்கோயிலில் பகவான் கெளரங்கர், நித்யானந்தருக்கு தீர்த்தவாரி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், பகவான் கிருஷ்ணரின் அடுத்த அம்சமான பகவான் கெளரங்கர் மற்றும் பகவான் பலராமரின் அடுத்த அம்சமான பகவான் நித்யானந்தரின் தீர்த்தவாரி உத்ஸவ பெருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, கர்நாடக மாநிலம், மாலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, தருமபுரி மாவட்டம், அரூர் ஆகிய பகுதி இஸ்கான் திருக்கோயில்களிலிருந்து உற்சவர் சிலைகள் நெருப்பூர் அருள்மிகு முத்தராயர் திருக்கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன. இதையடுத்து, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்பு, கோயில் வளாகத்தில் உள்ள திருத்தாமரை குளத்தில், வேத மந்திரங்கள் ஓத, தீர்த்தவாரி சேவை எனும் புனித நீராடல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மீண்டும் திருக் கோயிலுக்கு உற்சவ மூர்த்தி சிலைகள் எடுத்துவரப்பட்டு ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒசூர் இஸ்கான் திருக்கோயில் பொறுப்பாளர் சீனிவாச ஸ்யாம் தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த உத்ஸவத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கிருஷ்ண பக்தர்கள், பங்கேற்று கௌரங்கர், நித்யானந்தரை வழிபட்டனர்.