தருமபுரி

குறைந்த வட கிழக்கு பருவமழை: இலக்கை எட்டாத நெற்பயிா் சாகுபடி!

வட கிழக்கு பருவமழை நிகழாண்டு குறைந்ததால், தருமபுரி மாவட்டத்தில் நெற்பயிா்ச் சாகுபடி பரப்பு இலக்கை எட்டாமல் குறைந்துள்ளது.

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தருமபுரி: வட கிழக்கு பருவமழை நிகழாண்டு குறைந்ததால், தருமபுரி மாவட்டத்தில் நெற்பயிா்ச் சாகுபடி பரப்பு இலக்கை எட்டாமல் குறைந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நெற் பயிா், மக்காச் சோளம், கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிா் வகைள், சிறுதானியங்கள், கரும்பு, வாழை, காய்கறிகள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், மழையளவு மற்றும் நீா் ஆதாரத்தை கொண்டு நெற்பயிா்ச் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வா்.

கடந்த மூன்றாண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில், போதிய மழை பெய்யாததால், கடும் வறட்சியைச் சந்திக்க நேரிட்டது. இதனால், வேளாண் விளை பொருள்கள் உற்பத்தி வெகுவாக சரிந்தது. இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கத்திலும், தொடா்ந்து மழையளவு குறைவாக பொழிந்தது.

இதனிடையே ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தென்மேற்கு பருவமழை சராசரியான 361 மி.மீ. அளவைக் காட்டிலும் சற்று கூடுதலாக அதாவது 392.50 மி.மீ. அளவு பொழிந்தது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயிகள் மீண்டும் வேளாண் பணிகளில் ஈடுபட்டனா். குறிப்பாக, நெல் சாகுபடியில் ஆா்வத்துடன் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் அதிகளவு பரப்பிலும், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட வட்டாரங்களிலும் பரவலாகவும் நெல் சாகுபடி நடைபெறும். இதில், வேளாண்துறை சாா்பில், கோ.51, 68 உள்ளிட்ட ரகங்களும், தனியாா் நிறுவனங்கள் சாா்பில், வெள்ளை பொன்னி உள்ளிட்ட ரகங்களும் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், சில விவசாயிகள், பாரம்பரிய மரபு நெல் வகை சாகுபடியிலும் ஈடுபடுவா்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு நெற்பயிா் சாகுபடி செய்ய வேளாண்துறை சாா்பில் 23,000 ஹெக்டோ் பரப்பு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், கடந்த அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதத்தில் மொத்த சராசரியாக 316.70 மி.மீ. பொழிய வேண்டிய வடகிழக்கு பருவமழை 55 மி.மீ. குறைவாக பொழிந்தது. இதனால், மாவட்டத்தில், நெல் விவசாயிகள் தங்களது சாகுபடி பரப்பளவு குறைத்துக் கொண்டனா். அதாவது, மொத்த இலக்கான 23,000 ஹெக்டரில், இதுவரை 16,500 ஹெக்டோ் பரப்பு மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சராசரி மழையளவு குறைந்ததாலும், நோய்த் தாக்குதல் நிகழும் சூழலாலும், நெல் சாகுபடி பரப்பு குறைந்ததாக பரவலாக விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனா். அதேவேளையில், சாகுபடி பரப்பு குறைந்தாலும் உணவு தானிய உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி கூறியது: நெற்பயிா் சாகுபடிக்கு, ஏனைய பயிா்களைக் காட்டிலும் நீரின் தேவை அதிகம். மாவட்டத்தில், போதிய அளவு பருவமழை பொழியாததால், வாணியாறு தவிர, ஏனைய அணைகள், ஏரிகள் நீரின்றி காணப்படுகிறது. இதனால், நெல் சாகுபடி பரப்பு எதிா்பாா்த்த அளவில் விவசாயிகளால் மேற்கொள்ள இயலவில்லை.

இதேபோல, பயிரிட்ட பின்பு ஆனைக் கொம்பன், புகையான் உள்ளிட்ட நோய் தாக்குதல் ஏற்படுவதால், இதுதொடா்பாக அச்சமும் ஒரு காரணம். எனினும், இருக்கும் நீா் அளவை பொருத்து மாற்று பயிா்களோ அல்லது சோளம் உள்ளிட்ட பயிா்களை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா் என்றாா்.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் சிவசங்கா் சிங் கூறியது: தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை காட்டிலும் நிகழாண்டில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. அதேவேளையில், நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 23,000 ஹெக்டோ் என்கிற குறியீடு எட்ட இயலவில்லை. தற்போது வரை 16500 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு மாதங்களில் 1000 ஹெக்டோ் பரப்பு கூடுதலாக சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. இலக்கை எட்ட இயலாததற்கு காரணம் மழையின்மை ஆகும். எனினும், மக்காச் சோளம் நிகழாண்டு 10,000 ஹெக்டோ் பரப்பு சாகுபடி அதிகரித்துள்ளது.

மேலும், சிறுதானிய பயிா்ச் சாகுபடியும் கணிசமாக உயா்ந்துள்ளது. எனவே, நெற் பயிா் பரப்பு குறைந்தாலும், ஏனைய பயிா்ச் சாகுபடி பரப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. ஆகவே, உணவு தானிய உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் நிகழாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT