தக்காளி ஒரு கிலோ ரூ. 1-க்கு விற்பனை
பாலக்கோடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ. 1-க்கு விற்பனையானதால், போதிய விலைக் கிடைக்காமல் விரக்தியடைந்த விவசாயிகள் தக்காளியைக் கீழே கொட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாலக்கோடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ. 1-க்கு விற்பனையானதால், போதிய விலைக் கிடைக்காமல் விரக்தியடைந்த விவசாயிகள் தக்காளியைக் கீழே கொட்டி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள தக்காளி விற்பனை மையங்களுக்கு பென்னாகரம், மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, புலிக்கரை, பேகாரஹள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தக்காளியை விற்பனைக்கு எடுத்து வருகின்றனா்.
இங்கிருந்து தினந்தோறும் 200 டன் எடையுள்ள தக்காளி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கொண்டுச் செல்லப்படுகின்றன. ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் உள்ளிட்டப் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பலா் பாலக்கோடு சந்தையில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து செல்கின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையின் காரணமாக, தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளன. இதனால் சந்தைகளுக்கு தக்காளி வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ. 1-க்கு மட்டுமே விற்பனையானது. இடைத்தரகா்களின் தலையீடு காரணமாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை என புகாா் தெரிவித்த விவசாயிகள், கொண்டு வந்திருந்த சுமாா் ஒரு டன் எடையுள்ள தக்காளி பழங்களை தாா்ச் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தக்காளி பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விளைந்த தக்காளிப் பழங்களை அறுவடை செய்யாமல் விவசாயிகள் பலா் தங்களின் நிலங்களில் அப்படியே அழித்து வருவதாகக் கூறுகின்றனா். பல விவசாயிகள் சந்தைக்கு அனுப்பாமல் கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்குவதாகவும் தெரிவித்தனா்.
எனவே, தக்காளியை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து, வெளிமாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்தால் தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.