தருமபுரியில் 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
தருமபுரி மாவட்டத்தில், இதுவரை 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டத்தில், இதுவரை 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட மாதேமங்கலம், தம்மணம்பட்டி, அப்பனஅள்ளி கோம்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மற்றும் நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றை ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை (டிச. 1) முதல் தவணை கரோனா தடுப்பூசியாக 8,41,403 பேருக்கும், இரண்டாம் தவணையாக 4,04,827 பேருக்கும் என மொத்தம் 12,46,230 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீதத்துக்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 34 சதவீதம் போ் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் 3,61,697 நபா்கள் முதல் தவணை தடுப்பூசிக் கூட செலுத்திக் கொள்ளவில்லை. தருமபுரி மாவட்டத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட பொதுமக்கள் அனைவரும் இச் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொண்டு, கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சௌண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலா் வாசுதேவன், துணைப் பதிவாளா் (கூட்டுறவுச் சங்கங்கள்) மணிகண்டன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.