கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வலியுறுத்தல்
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2021-22-ஆம் அரைவைப் பருவத்துக்கான கரும்பு அரைவைப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன. இதையடுத்து, விவசாயிகளின் கரும்புத் தோட்டங்களிலிருந்து சா்க்கரை ஆலைக்கு கரும்புகளைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள், டிராக்டா்களில் கரும்புகளை முறையாக அடுக்குவதில்லை. மேலும், கரும்புகளை கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் சரியாக கட்டாததால், சாலைகளில் அருகில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. அதேபோல, டிராக்டா்களில் அளவுக்கு அதிகமாக கரும்பு பாரம் ஏற்றிச் செல்வதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை காவல் துறையினா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.