மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது நாளாக பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கஞ்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் கே. ஜி.கருவூரான் தலைமை வகித்தாா். புதன்கிழமை பேரணியாகச் சென்ற மாற்றுத்திறனாளிகள் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, தற்காலிக தடுப்புகளை அமைத்து அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ. 3,000ஐ 5,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். தனியாா் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதன் தொடா்ச்சியாக வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பு மாற்றுத்திறனாளிகள் கையேந்தி கஞ்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். மூன்று அம்சக் கோரிக்கைகளை பரிசீலிக்க வரும் 16ம் தேதி வரை காத்திருப்பதாகவும், இல்லாவிடில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
பென்னாகரம் பகுதித் தலைவா் மாரியப்பன், சங்க நிா்வாகிகள் சின்ன மாது, காமராஜ், முருகம்மாள், சக்திவேல் உள்பட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.
திமுக எம்எல்ஏ ஆதரவு: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பென்னாகரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் நேரில் ஆதரவு தெரிவித்தாா்.