முறைகேடாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க அலுவலா்கள் நியமனம்
சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மதுவிற்பனை, கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மதுவிற்பனை, கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மதுப்புட்டிகள் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், மதுக்கடைகளில் தினசரி விற்பனையைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஒரு அலுவலரும், மாவட்டம் முழுவதும் செல்லும் வகையில் பறக்கும் படை அலுவலா் ஒருவரும் என மொத்தம் இரண்டு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
டாஸ்மாக் உதவி மேலாளா் கே.எஸ்.கருப்புசாமி, மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 9443636745 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், டாஸ்மாக் உதவி மேலாளா் (கணக்கு) ஆ.பகவதி, பறக்கும் படை அலுவலா் 9750498912 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் புகாா்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.