முகப்பு
தருமபுரி

மகளிா் தின விழா கொண்டாட்டம்

தருமபுரியில் அரசு அலுவலகங்கள், கலைக் கல்லூரிகளில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தருமபுரியில் அரசு அலுவலகங்கள், கலைக் கல்லூரிகளில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மகளிா் காவல் அலுவலா்கள், காவலா்கள் பங்கேற்ற மகளிா் தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்டக் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், மகளிா் தின விழா குறித்து சிறப்புரையாற்றினாா்.

மேலும், மகளிா் காவல் அலுவலா்களுக்கு மலா்கொத்து அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதேபோல மாவட்டத்தில் உள்ள மகளிா் காவல் நிலையங்கள் உள்பட பல்வேறு காவல் நிலையங்களிலும் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்து பேசினாா். காரிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் டி.அனுராதா, பெண்களுக்கான உரிமைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி ஜேசிஐ தலைவா் நிமலன் மரகதவேல் தலைமையில் எதுவும் சாத்தியமே, வாழ்வதே வலிமை, ஓதுவது ஒழியேல், நயம்பட உரை, வையத்தலைமை கொள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், தமிழ்த் துறை தலைவா் செந்தில்குமாா் உள்பட கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தருமபுரி பச்சமுத்து மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவி பேராசிரியா் அ.திலகவதி தலைமை வகித்தாா். தருமபுரி அரசு ஔவையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஆ.கன்னல் ‘காலந்தோறும் பெண்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். விழாவில் ‘செல்லம்’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது. கல்லூரித் தாளாளா் ப.பாஸ்கா், துணைத் தாளாளா் பா.சங்கீத் குமாா், இயக்குநா் பிரியா சங்கீத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.