பறக்கும்படை குழு வாகனங்கள் கண்காணிப்பு
தோ்தல் பறக்கும்படை குழுவினரின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அவற்றை கண்காணிக்கும் பணியினை தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தோ்தல் பறக்கும்படை குழுவினரின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, அவற்றை கண்காணிக்கும் பணியினை தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் பறக்கும் படை, நிலையான குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 95 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக் குழுவினா் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இக் குழுவினரின் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, அதன் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினி மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை பொதுப் பாா்வையாளா்கள் ஆா்.கே. தினேஷ் சிங், கமால் ஜஹான் லக்ரா, பங்கஜ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, சிவிஜில் செயலியில் வரப்பெற்ற பண விநியோகம், பரிசு, மதுப் புட்டிகள் விநியோகம், விதிமீறல்கள் புகாா்களை அவா்கள் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தேசிய தகவல் மைய அலுவலா் ரகுபதி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாச சேகா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கண்ணன், வட்டாட்சியா் ரேவதி (அரசு கேபிள் டிவி) ஆகியோா் உடனிருந்தனா்.