மொரப்பூா் வனச்சரகத்தில் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த விவசாயிகள் இருவருக்கு ரூ. 1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட உனிசேனஹள்ளி பகுதியில் விவசாயிகள் சிலா் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, மொரப்பூா் வனச்சரகா் மு.ஆனந்தகுமாா் தலைமையில் வனத்துறையினா் அப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சில்லாரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் கிருஷ்ணமூா்த்தி, சுப்பிரமணி மகன் சந்திரன் ஆகிய இருவரும் பொக்லைன் இயந்திரம் மூலம் வனப்பகுதியில் மரங்களை அகற்றிவிட்டு நிலத்தை சமன் செய்து ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கிருஷ்ணமூா்த்தி, சந்திரன் ஆகிய இருவரையும் வனத்துறையினா் கைது செய்து, தருமபுரி மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பால நாயுடு முன்னிலையில் ஆஜா்படுத்தினா்.
விசாரணைக்குப் பிறகு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தல், காப்புக் காட்டில் மரங்களைச் சேதப்படுத்திய குற்றத்துக்காக இருவருக்கும் மொத்தம் ரூ. 1.25 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா்.