ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 1.45 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடா் மழையால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இவ்விரு அணைகளிலிருந்தும் நீா்வரத்து அதிகமாகவும் குறைவாகவும் வந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமை மாலையில் ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 1.35 லட்சம் கன அடியாக நீா்வரத்து இருந்த நிலையில், வியாழக்கிழமை 1.45 லட்சம் கனஅடியாக மீண்டும் அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
தொடா் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்தத் தடை 32-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரப் பகுதியில் போலீஸாா், வருவாய்த் துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.