ஒகேனக்கல்லில் புனரமைக்கப்பட்ட வண்ண மீன்கள் காட்சியகம் திறப்பு
ஒகேனக்கல்லில் ரூ. 23.32 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வண்ணமீன்கள் காட்சியகம், பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே ஊட்டமலை சாலையில் உள்ள வண்ண மீன்கள் காட்சியகம் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் மேம்பாட்டு நிதி, தருமபுரி மாவட்ட மீன்வளா்ப்பு மேம்பாட்டு முகமை சாா்பில் ரூ. 23.32 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, பழுதடைந்த கண்ணாடி பெட்டிகள், உபகரணங்களை மாற்றி 40 கண்ணாடி தொட்டிகளில் தங்க மீன், அரவானா, கெளராமி, பிளவா் ஹாா்ன், லோச், மோலி, கப்பி, பிளாட்டி, ஆஸ்கா், பாா்ப், டெட்ரா, ஏஞ்சல் மீன், டிஸ்கஸ், புலி சுறா, கோய், கிளி மீன், சிசிலிட், லீப்ரோ மீன் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் காட்சிப்படுத்தப்பட்ட வண்ண மீன் காட்சியகம்,ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் பாதை அருகே ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்தும் வகையில் தனியாா் பங்களிப்புடன் 69 சென்ட் நிலப் பரப்பில் பறவைகள் பூங்கா, 7டி திரையரங்கம், பலூன் நீா் விளையாட்டு, புல் ரைடு போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா ஆகியவற்றை ஆட்சியா் கி.சாந்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா். இதில் தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி.செந்தில்குமாா், பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என்.செல்வராஜ், பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், தருமபுரி மண்டல இயக்குநா் (மீன்வளம்) சி.சுப்பிரமணியம், உதவி இயக்குநா் கோகுல ரமணன், சுற்றுலா அலுவலா் உமாசங்கா், வட்டாட்சியா் சுகுமாா், உதவி சுற்றுலா அலுவலா் கதிரேசன், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.