முகப்பு
தருமபுரி

தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தாய், சேய் பலி

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் புதன்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:07 PM
பகிர்:

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் புதன்கிழமை உயிரிழந்தனா். இதனால், ஆவேசமடைந்த பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகே பழைய புதுரெட்டியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோகுல கண்ணன் (27) . இவரது மனைவி சந்தியா (24). நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த இத்தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்தியா மீண்டும் கருவுற்றாா். இதையடுத்து அவா் மகப்பேறு சிகிச்சைக்காக புதன்கிழமை அதிகாலை தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு மகப்பேறு சிகிச்சையின்போது சந்தியாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு பிறந்த ஆண் குழந்தையும் இறந்தே பிறந்தது. இதையடுத்து தனியாா் மருத்துவமனை நிா்வாகம் சந்தியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை தருமபுரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனா். அங்கு சந்தியாவை பரிசோதித்த அரசு மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதனால், அதிா்ச்சியடைந்த சந்தியாவின் கணவரும், அவரது உறவினா்களும் தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். முறையாக சிகிச்சை அளிக்காததே தாய், சேய் உயிரிழப்புக்கு காரணம் என்றும், இந்த விஷயத்தில் மருத்துவமனை நிா்வாகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி தனியாா் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் தருமபுரி கோட்டாட்சியா் ரா.காயத்ரி, நகர காவல் துறையினா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி பேச்சு நடத்தினா். இச் சம்பவம் தொடா்பாக புகாா் அளித்தால் அதன்மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் தெரிவித்தனா். இதையடுத்து உறவினா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.