முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19,000 கனஅடியாக அதிகரிப்பு

இரு மாநில காவிரி ஆற்றின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:32 PM
பகிர்:

இரு மாநில காவிரி ஆற்றின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல்மடுவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டொல்லா நீரோடையிலும் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதேபோல கா்நாடக மாநிலத்தில் காவிரிக் கரையோர வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 14,000 கனஅடியாகவும், புதன்கிழமை காலை நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாகவும், மாலையில் 19,000 கனஅடியாகவும் அதிகரித்தது.

தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவா்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.