ஒகேனக்கல் வனப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவா் கைது
ஒகேனக்கல் வனப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒகேனக்கல் வனப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒகேனக்கல் வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட வன அலுவலா் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் ராஜ்குமாா் வனக்காப்பாளா் ரவிக்குமாா், காளிமுத்து, வனவா் கோபால் உள்ளிட்ட 5 போ் கொண்ட வனக் குழுவினா், ஒகேனக்கல் காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ் தலைமையிலான நான்கு போ் கொண்ட காவலா்கள் அடங்கிய இரு குழுவினா்களும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஒகேனக்கல் வனச்சரகத்திற்கு உள்பட்ட இருசன் கிணறு பகுதியில் இரண்டு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அரண்மனை பள்ளம் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் வடிவேல் (47), மாதப்பன் மகன் காளிமுத்து (44) ஆகிய இருவரையும் கைது செய்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள், பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தங்குவது, வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்வது, வனப்பகுதிகளில் சமைப்பது, சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.