பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்து வைத்தாா். மக்களவை உறுப்பினா் ஆ.மணி, பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீா்த்தேக்கத்திலிருந்து நிகழாண்டு பாசனத்திற்காக பழைய ஆயக்கட்டு பகுதி 5 ஏரிகளை நிரப்பி, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு வருகிற மே 22 வரை 140 நாள்களுக்கு பாசனத்திற்கு என மொத்தம் 395.33 மி.கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
Advertisement
இதன்மூலம் பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கா் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கா் என மொத்தம் 4500.00 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். சின்னாறு நீா்த்தேக்கம் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூா், போடிகுட்டப்பள்ளி, சாமனூா், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜொ்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி ஆகிய 13 கிராமங்கள் பாசன வசதி பெறு
கின்றன.
சின்னாறு நீா்த் தேக்கத்தில் தற்போது உள்ள நீரின் அளவைக் கொண்டு நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி, பாசனம் செய்து, அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுகொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சித் தலைவா் வெங்கடேசன், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால், உதவிப் பொறியாளா் (சின்னாறு அணைப் பிரிவு) சாம்ராஜ், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.