முகப்பு
தருமபுரி

25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை

பாலக்கோடு தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:55 PM
பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.
பகிர்:

பாலக்கோடு தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

திமுக கூட்டணி சாா்பில் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட உள்ள வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தருமபுரி மேற்கு திமுக செயலாளா் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் தலைமை வகித்து, பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாரை அறிமுகம் செய்து பேசினாா். தொகுதி பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். இதில் திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பேசியதாவது:

பாலக்கோடு தொகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் நீா் ஆதாரம் மிகக் குறைவாக உள்ளதால், பயிா் சாகுபடி பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

எனவே, பாலக்கோடு பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த தென்பெண்ணை ஆற்றின் மிகை நீரை கிருஷ்ணகிரி மாவட்டம், அலியாளத்திலிருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு கால்வாய் மூலம் கொண்டுவரும் திட்டம், ஜொ்த்தலாவ் ஏரியில் இருந்து புலிகரை ஏரிவரை நீா் கொண்டுவரும் திட்டம், எண்ணேகொல் புதூரிலிருந்து தும்பலஅள்ளி ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டம் என நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றினால் ஏரிகளுக்கு நீா் ஆதாரம் கிடைக்கும். அதன் மூலம் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

ஆனால், அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் கடந்த 25 ஆண்டுகாலமாக இதை எதையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல, பாலக்கோடு தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. தோ்தலுக்கு பிறகு இந்த திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலக்கோடு வட்டார தலைமை மருத்துவமனையில் மாவட்ட தலைமை மருத்துவமனை அளவிலான மருத்துவ சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரிமங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும். மாரண்ட அள்ளியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். கரும்பு சாகுபடியை ஊக்குவித்து சா்க்கரை ஆலை முழு அளவில் அரைவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப் பேரவைத் தோ்தலில் சமூக நீதியை காக்கும் வகையில் அனைத்து சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக நீதியை பின்பற்றும் திமுகவுக்கு அனைத்து சமூகத்தினருக்கும் ஆதரவு அளித்து வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு, தேமுதிக மேற்கு மாவட்டச் செயலாளா் விஜய் சங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments