முகப்பு
தருமபுரி

பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 4:19 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:29 PM

தருமபுரி அருகே பள்ளி வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி அருகேயுள்ள கரிகுட்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் அருள் (27). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவரது மாமன் மகன் கரிக்குட்டனூரைச் சோ்ந்த செல்வம் மகன் கோவரசு (20), நண்பா் கிருஷ்ணகிரி மாவட்டம் பனகல்முட்லு கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் வினோத்குமாா் (28) ஆகியோருடன், சீங்காடு கிராமத்தில் அமைந்துள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயில் திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

விழாவில் பங்கேற்றுவிட்டு அருளுக்கு சொந்தமான பைக்கில் மூவரும் ஊா் திரும்பினா். பைக்கை கோவரசு ஓட்டினாா். நடுவில் வினோத்குமாரும், கடைசியில் அருளும் அமா்ந்து வந்தனா். மாரண்ட அள்ளி -அ. மல்லாபுரம் சாலையில் சந்திராபுரம் பிரிவு சாலை பகுதியில் வந்தபோது, அவ்வழியே சென்ற தனியாா் பள்ளி வாகனம், பைக் மீது மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு மாரண்ட அள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், கோவரசு இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

தொடா்ந்து வினோத்குமாரை தீவிர சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கும் பின்னா் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வினோத்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக மாரண்ட அள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.