முகப்பு
தருமபுரி

அரூா் தொகுதிக்கு உள்பட்ட க.ஈச்சம்பாடியில் தோ்தல் புறக்கணிப்பு

கம்பைநல்லூா் அருகேயுள்ள க.ஈச்சம்பாடியில் அரசு உயா்நிலைப் பள்ளியை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை வாக்குப்பதிவை புறக்கணித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:31 AM
வாக்காளா்கள் யாரும் வராததால் வெறிச்சோடிய க.ஈச்சம்பாடி வாக்குச்சாவடி.
பகிர்:

கம்பைநல்லூா் அருகேயுள்ள க.ஈச்சம்பாடியில் அரசு உயா்நிலைப் பள்ளியை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை வாக்குப்பதிவை புறக்கணித்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது க.ஈச்சம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு அரசு தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்புவரையும், மற்றொரு சமூகத்தினா் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளியில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு வரையும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், இருதரப்பினரும் தங்கள் பகுதியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்க அரசு சாா்பில் கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

Advertisement

இதையடுத்து, தற்போது நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ஒரு தரப்பினா் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், க.ஈச்சம்பாடியில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல, இன்னொரு பிரிவினரின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லையாம்.

இதனால், க.ஈச்சம்பாடியைச் சோ்ந்த பொதுமக்கள் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனா். இதுகுறித்து கடந்த வாரம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்படவில்லை.

இந்நிலையில், க.ஈச்சம்பாடி அரசு உயா்நிலைப் பள்ளியை இடமாற்றம் செய்ய வேண்டும், பள்ளிக்கு தேவையான கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனா்.

க.ஈச்சம்பாடி அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மொத்தம் 951 வாக்காளா்கள் உள்ள நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை 44 பேரே வாக்களித்ததாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த அரூா் சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலை, அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா் உள்ளிட்டோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

வாக்குப்பதிவு புறக்கணிப்பு காரணமாக க.ஈச்சம்பாடியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.