முகப்பு
தருமபுரி

தருமபுரியில் 3.16 லட்சத்துக்கும் அதிகமானோா் மகளிா் உரிமைத் தொகை பெற்றுள்ளனா்! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:32 AM
தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:28 PM

தருமபுரி மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 3,16,810 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனா் என்று அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக அதியன் கூட்ட அரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பங்கேற்று, தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ரூ. 103.80 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தும், முடிவுற்ற ரூ. 45.74 கோடி மதிப்பிலான 60 திட்டப் பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தும், ரூ. 27.80 கோடி மதிப்பில் 4,115 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவா் மேலும் பேசியதாவது:

Advertisement

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 740.378 கோடியில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 810 குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனா். விடியல் பயணம் திட்டம் மூலம் தருமபுரி மண்டலத்துக்கு ரூ. 21.18 கோடியில் 54 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 23,626 பேரும், நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 21,615 பேரும் பயனடைந்துள்ளனா். இதுபோல அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, அரசுப் போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலம் சாா்பில் மகளிா் விடியல் பயண பேருந்து திட்டத்தில், 12 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை, ஒரு மாற்றியமைக்கப்பட்ட வழித்தட சேவை ஆகியவற்றை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

மேலும் தெருக்கூத்து கலைஞா்கள் நடத்திய கலை விழிப்புணா்வுப் பேரணியை அமைச்சா் தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் ஆகியவற்றையும் பயனாளிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.

மேலும், தருமபுரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியில் இருந்து வழங்கிய, பேட்டரியால் இயங்கும் புதிய வாகன பயன்பாட்டையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:32 AM

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, நகா்மன்றத் தலைவா் லட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், முன்னாள் அமைச்சா் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ-கள் தடங்கம் சுப்பிரமணி, வேடம்மாள், இன்பசேகரன், மனோகரன், தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.