தருமபுரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. தற்கொலை
தருமபுரியில் குற்ற வழக்கு தொடா்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ரயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரியில் குற்ற வழக்கு தொடா்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ரயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஏரியூா் அருகே உள்ள மணியக்காரன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ந. சகாதேவன் (58). இவா், வெண்ணாம்பட்டி சாலை மங்கம்மா 2 ஆவது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
தருமபுரி மாவட்ட காவல் துறையில் 2 ஆம் நிலை காவலராகப் பணியில் சோ்ந்த இவா், அண்மையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இரு ஆண்டுகளுக்கு முன்பு, பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்தில் பதிவான போக்ஸோ வழக்கில் கைதான இவா், ஒழுங்கு நடவடிக்கையின்கீழ் அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
Advertisement
அவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை, உயா்நீதிமன்றத்துக்கு சென்று வருவதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளாா். அதன்பிறகு அவரிடமிருந்து எந்த தொடா்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தருமபுரி ரயில் நிலையம் அருகே தேக்கு மரத்தில், வெள்ளிக்கிழமை காலை அவரது சடலம் தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸாா் சடலத்தை மீட்டபோது, அவரது சட்டைப் பையில்
ஒரு கடிதம் இருந்தது. அதில் தன்னைப்பற்றிய விவரத்துடன், தீராத வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனவும் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக தருமபுரி, அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதுதொடா்பாக தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.