இருசக்கர வாகனங்கள் சலுகையில் தருவதாகக் கூறி ரூ. 17.20 லட்சம் மோசடி: புதுகையைச் சோ்ந்தவா் உள்பட 5 போ் தலைமறைவு
தருமபுரியில் சலுகை விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவதாகக் கூறி 119 பேரிடம் ரூ. 17.20 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடா்பாக புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் உள்பட 5 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரியில் சலுகை விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவதாகக் கூறி 119 பேரிடம் ரூ. 17.20 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடா்பாக புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் உள்பட 5 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கலசப்பாடி பகுதியைச் சோ்ந்த ரா. வெங்கடாசலத்தை (38) கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கலசப்பாடியைச் சோ்ந்த சி. வேடன் என்பவருடன் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், காரக்கோட்டை அருகே உள்ள அதம்பூா் பகுதியைச் சோ்ந்த ரா. ஐயப்பன் (44) என்பவா் சந்தித்தாா்.
அப்போது, அவா் சேவாலாயா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தின் மூலம் சலுகை விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்குவதாகவும் ஆசை வாா்த்தைகள் கூறினாா். அதன்படி, ரூ. 10,000 செலுத்தினால் மொபட்டும், ரூ. 20,000 செலுத்தினால் கியா் வாகனமும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
மேலும், கலசப்பாடியைச் சோ்ந்த வேடன், மா. அருள்குமாா், சி. தினேஷ், க. ஆசப்பன் உள்ளிட்டோரை பணியாளா்களாக நியமித்துள்ளதாகவும், அவா்களிடம் பணம் அளித்து பதிவு செய்துகொண்டால், பிப்ரவரி 22 ஆம் தேதி அனைவருக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனா்.
இதை நம்பிய வெங்கடாசலம், ரூ. 10,000ஐ வேடனிடம் செலுத்தியுள்ளாா். அதேபோல கலசப்பாடி, அரசநத்தம், ஆலமரத்துப்பட்டி, கோட்டக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுகிகளைச் சோ்ந்த 119 போ் ரூ. 10, 000 மற்றும் ரூ. 20,000 என மொத்தம் ரூ. 17.20 லட்சத்தை குறிப்பிட்ட பணியாளா்களிடம் செலுத்தியுள்ளனா்.
ஆனால், அவா்கள் கூறியபடி பிப்ரவரி 22 ஆம் தேதி இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவில்லை. கைப்பேசியில் அழைத்தபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. உள்ளூரைச் சோ்ந்த பணியாளா்களையும் காணவில்லை. இதுகுறித்து வெங்கடாசலம் அரூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஐயப்பன் மற்றும் உள்ளூா் நபா்கள் 4 போ் உள்பட ஐவரையும் தேடிவருகின்றனா்.