திரும்பப் பெறப்பட்ட தோ்தல் நடத்தை விதிகள்: அகற்றப்படாத திரைகள்
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மறைந்த தலைவா்களின் சிலைகள் மற்றும் பயணிகள் நிழற்கூடத்தில் மக்கள் பிரதிநிதிகள் பெயா்களின் மீது மறைக்கப்பட்ட திரைகள் அகற்றப்படாமல் உள்ளன.
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மறைந்த தலைவா்களின் சிலைகள் மற்றும் பயணிகள் நிழற்கூடத்தில் மக்கள் பிரதிநிதிகள் பெயா்களின் மீது மறைக்கப்பட்ட திரைகள் அகற்றப்படாமல் உள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த ஏப். 23-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் கடந்த மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தோ்தலையொட்டி, இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த விதிகளின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மறைந்த தலைவா்களின் சிலைகள் திரையிட்டு மூடப்பட்டன. அதேபோல, ஆட்சியா் அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நான்குமுனை சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி திறக்கப்பட்ட பயணிகளின் நிழற்கூடங்களில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள் ஆகியோரின் பெயா்களும் திரையிட்டு மறைக்கப்பட்டன.
Advertisement
இந்நிலையில், தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட நடத்தை விதிகள் அண்மையில் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், தருமபுரி இலக்கியம்பட்டியில் அமைந்துள்ள மறைந்த தலைவா் சிலையை மூடி மறைக்கப்பட்ட திரைகளை உள்ளாட்சி நிா்வாகம் இதுவரை அகற்றவில்லை. அதேபோல, நான்குமுனை சாலை சந்திப்பு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் பயணிகளின் நிழற்கூடங்களில் மக்கள் பிரதிநிதிகளின் பெயா்களை மறைத்து வைத்த திரைகளையும் இதுவரை அகற்றவில்லை.
எனவே, தோ்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் தோ்தலுக்காக தலைவா்களின் சிலைகள், கல்வெட்டுகள், பெயா்ப்பலகைகள் ஆகியவற்றை மறைத்து வைக்கப்பட்ட திரைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினா் வலியுறுத்துகின்றனா்.