மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெங்கி நாய்க்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெங்கி நாய்க்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். உதவி ஆணையர் ஆயம் கீதா ராணி, ஆதி திராவிடர் நலத் துறைத் துணை ஆட்சியர் சிவசங்கரன், ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் சுப்பிரமணியம், தனி வட்டாட்சியர் பி. தண்டபாணி, மண்டலத் துணை வட்டாட்சியர் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் சின்னசாமி, வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்ட முகாமில் உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை வழங்குதல், ஓய்வூதியம் உள்ளிட்ட 117 பயனாளிகளுக்கு ரூ. 24 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில், ஊத்தங்கரை வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் பிந்து, தீயணைப்புத் துறை அலுவலர் கணேசன், வேளாண்மைத் துறை அலுவலர் பிரபாவதி, வருவாய்த் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.