வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!
வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது பற்றி...
வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும் மீறி கப்பலை இயக்கினால் சுட்டு வீழ்த்துவோம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ஏற்கெனவே ரூ. 60 அளவுக்கு உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது முன்பதிவு காலத்தை 21 நாள்களில் இருந்து 25 நாள்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் மருத்துவமனை போன்ற அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
வணிக சிலிண்டர்களை உபயோகிப்பவர்கள் மாற்று வழியைத் தேடிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உணவகங்களை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது.