பர்கூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அரசமரத்து மகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கணேஷ் நகரில் உள்ள அருள்மிகு அரசமரத்து மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ஆம் தேதி கால பூஜை, யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மே 16-ஆம் தேதி காலை கால பூஜை, யாகசாலை பூஜை, வேதபாராயணம் ஹோமம், புதிய விக்ரகங்கள் கண் திறப்பு, கோ பூஜை, தீபாராதனை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூன்றாம்கால யாக பூஜை, யாகசாலை பூஜை, ஹோமமும், காலை 6 மணிக்கு நான்காம்கால யாக பூஜையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அருள்மிகு அரசமரத்து மகா மாரியம்மன் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.