முகப்பு
கிருஷ்ணகிரி

ஸ்ரீகரியாள லிங்கேஸ்வர சுவாமி கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூரை அடுத்த பாகலூர் அருகேயுள்ள படதேப்பள்ளி கிராமத்தில் உள்ள  பிரசித்தி பெற்ற  ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வர சுவாமி கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஓசூரை அடுத்த பாகலூர் அருகேயுள்ள படதேப்பள்ளி கிராமத்தில் உள்ள  பிரசித்தி பெற்ற  ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வர சுவாமி கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குரும்பர் இன மக்களின் குல தெய்வ கோயிலான இந்தக் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற திருவிழாவில்,  30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி,  ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வரர்,  ஸ்ரீ லட்சுமி,  ஸ்ரீ பார்வதி உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து,   சிக்கம்மா,  தொட்டம்மா,  கூளிசந்திரய்யா,  கரியாள சம்பங்கி,  ராமதேவுரு, பத்ராயன், பீரே தேவுரு உள்ளிட்ட 26 சுவாமிகளின் கலசங்கள் அலங்கரிக்கப்பட்டு, 8 எருதுகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து,  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது தலைகளில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் .  இந்தத் தேங்காய்களை  தொட்டபேளூர் சம்பங்கி,  ஆனேகல் முனிராஜ்  ஆகியோர் உடைத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காகேனஹள்ளி கனகபீடா மடாதிபதி ஸ்ரீ ஈஸ்வரானந்தா பூரிஜி,  தமிழக இளைஞர் நலன்-  விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பா. பாலகிருஷ்ணா ரெட்டி,   கன்னட நடிகர் துணியா விஜய்,   ஸ்ரீ கரியாள லிங்கேஸ்வர சுவாமி அறக்கட்டளையின் தலைவர் சிக்க நாகப்பா,   செயலர் கரியப்பா,  பொருளாளர் ருத்ராப்பா, துணைச் செயலர் நாராயணன்,  அறங்காவலர் சிக்கமுனியப்பா,  ஊர் பிரமுகர்கள் முரளி,  கேசவன்,  கேம்ராஜ்,  ரேவண்ணா, வி.எம்.எம்.கிருஷ்ணன், சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தமிழகம் மட்டுமின்றி,  கர்நாடகம்,  புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →