போச்சம்பள்ளி பகுதியில் மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உரிய விலை கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் போச்சம்பள்ளி , மஞ்சமேடு, பண்ணந்தூர், வண்டிக்காரன் கொட்டாயில் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் செடிகள் அமோகமாக வளர்ந்துள்ளன. இப்பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்ததால் நிகழாண்டும் மஞ்சள் சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் மேற்கொண்டனர்.
பண்ணந்தூரில் இருந்து காரிமங்கலம் செல்லும் சாலையில் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் மஞ்சள்குலைகள் தரத்தில் சிறந்து விளங்குவதால் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்துக்கு வந்து மஞ்சள் செடிகளைப் பார்வையிட்டு அதன் தரத்துக்கேற்ப விலைபேசி முன்பணம் கொடுத்து பின்னர் கொள்முதல் செய்து கொள்கின்றனர்.
இந்தாண்டு மஞ்சள் செடிகள் அமோகமாக வளர்ந்துள்ளது என்றாலும் சில இடங்களில் மஞ்சளை நோய் தக்கியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு, வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில் சிக்கல், உரம் விலை ஏற்றம் உள்பட உற்பத்தி செலவு அதிகமாகியிருப்பதால் செலவுக்கேற்ப உரிய விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர்.