கிருஷ்ணகிரியில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையின் சார்பில், கிருஷ்ணகிரியில் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலகில் விநாடிக்கு 17 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மது, புகையிலைப் பொருள்களின் பயன்பாடு, முறையற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்கள் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளை உண்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.
புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த இயலும், வயதுக்கேற்ப புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம் என்பன போன்ற பதாகைகளை ஊர்வலத்தில் பங்கேற்றோர் ஏந்தி சென்றனர்.
இதில் நலப் பணிகளின் இணை இயக்குநர் அசோக்குமார், சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் பிரியா ராஜ், செவிலியர் கல்லூரி மாணவியர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில், வன்முறை தடுப்பு மற்றும் உடமை சேதார தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு வில்லையை 108 அவசர ஊர்தியில் மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் ஒட்டினார்.