கோடை விடுமுறையின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை (ஜூன் 3) பள்ளி திறக்கப்படுவதால், விடுமுறைக்கு விடை கொடுக்கும் வகையில் தங்கள் பெற்றோருடன் மாணவர்கள் பலர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தவிர ஆந்திரம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். இதனால் ஒகேனக்கல் மலைப் பாதையில் வாகன நெரிசல் அதிகரித்தது. வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லாததால் சாலையோரங்களில் பலர் நிறுத்தினர்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ப புதிய கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்தன. மீன் உணவு, எண்ணெய் மசாஜ் செய்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டினர். பரிசல் சவாரி செய்வதற்கு ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். பிரதான அருவிக்கு செல்லும் சாலை பகுதியில் ஏராளமானோர் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதைத் தவிர, முதலைப் பண்ணை, பூங்கா, வண்ண மீன் காட்சியகத்தை பலரும் கண்டு ரசித்தனர். கோத்திக்கல், ஆலம்பாடி,முதலைப் பண்ணை மற்றும் ஊட்டமலை பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகள் குளிப்பதற்கு ஆபத்தான இடங்கள் என அறிவிப்பு இருந்தும், அப் பகுதியில் பலர் குளித்தனர். சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவிகள் மற்றும் மணல் மேடு போன்ற பகுதிகளை பரிசல் மூலம் சென்று கண்டு ரசித்தனர். கிலோ மீன் 140 முதல் 520 வரை விற்பனையானது.