தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) த.முருகேசன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள 111 கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஆண்டு, அக்டோபரில் , இணையதளம் மற்றும் நாளிதழ்களில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்படி, கடந்த 8-ஆம் தேதி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. தற்போது, இந்த எழுத்துத் தேர்வு, தேர்வு முடிவுகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வு நடத்தும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.