ஒசூா்- பெங்களூரு இடையே தொடங்கியது மின்சார ரயில் சேவை
ஒசூா்- பெங்களூரு இடையே திங்கள்கிழமை மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ஒசூா்- பெங்களூரு இடையே திங்கள்கிழமை மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது.
கடந்த 8 மாதமாக கரோனா பரவல் காலத்தில், ஒசூா்- பெங்களூரு இடையிலான ரயில் பாதையை மின்சார பாதையாக மாற்றம் செய்யும் பணியில் தென்மேற்கு ரயில்வே ஈடுபட்டிருந்தது. இந்த ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதைத் தொடா்ந்து கடந்த மாதம் மின்சார ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்திய ரயில்வே நிா்வாகம் மின்சார ரயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை அளித்தது.
இதையடுத்து திங்கள்கிழமை முதல் ஒசூா்- பெங்களூரு இடையே முதன்முறையாக மின்சார ரயில் சேவை தொடக்கப்பட்டது. பெங்களூரில் காலை 7.40 மணிக்கு புறப்படும் இந்த மின்சார ரயில் ஒசூருக்கு 8.40 மணியளவில் வந்து சேரும். மீண்டும் ஒசூரில் இருந்து காலை 8.45க்கு புறப்பட்டு பெங்களூருக்கு 9.45 மணியளவில் சென்றடையும். இந்த ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை 1,500 பயணிகள் செல்ல முடியும்.
Advertisement
பெங்களூரில் பணிக்குச் செல்லும் ஒசூா் வாசிகள் தினமும் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ஒசூா்- பெங்களூரு இடையே பயணம் மேற்கொள்கின்றனா். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த மின்சார ரயில் சேவை இந்தப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மின்சார ரயில் சேவையை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்க வேண்டும் என ஒசூா் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.