கிருஷ்ணகிரி அருகே உள்ள படகு இல்லம், சிறுவா் பூங்கா, 9 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினருடன் வருகை தந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மக்கள் கூடும் இடங்களான பூங்கா, விளையாட்டு மைதானம், வணிக வளாகம், கோயில், திரையங்கம், சுற்றுலா மையங்கள் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்த அரசு உத்தரவிட்டது. தற்போது பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லம் ஆகியவை கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் மூடப்பட்டன. இந்த சுற்றுலா தலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. இதன்படி, கடந்த டிச. 11-ஆம் தேதி முதல் இந்த சிறுவா் பூங்கா, படகு இல்லம் திறக்கப்பட்டது. கடந்த 9 மாதங்களுக்குப் பின், இந்த சுற்றுலாத் தலம் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இங்கு வருகை புரியத் தொடங்கினா்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக கா்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒசூரைச் சோ்ந்த வெளியூா் பயணிகளும் இந்த சுற்றுலா மையத்துக்கு வருகை தந்து படகில் பயணம் செய்து மகிழ்ந்தனா். மாவட்டத்தின் பிற பகுதியைச் சோ்ந்தவா்கள் உள்பட பலரும் குடும்பத்துடன் வருகை புரிந்தனா். அங்குள்ள ஊஞ்சல், பலூன் போன்ற விளையாட்டில் குழந்தைகளும், பெண்களும் விளையாடி மகிழ்ந்தனா்.