45,000 மெட்ரிக் டன் எல்பிஜி! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!
ஈரான் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்த சிவாலிக் கப்பல், குஜராத் துறைமுகம் வந்தடைந்தது குறித்து...
ஈரான் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்த எல்.பி.ஜி. எரிவாயு சரக்குக் கப்பலான சிவாலிக், குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு இன்று (மார்ச் 16) வந்தடைந்தது.
இக்கப்பலில், சுமார் 45,000 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய வாயு) உள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு உருளைக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், இக்கப்பல் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளதால், கேஸ் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரானும் அமெரிக்க ஆதரவு பெற்ற நாடுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால், போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.
உலகளவில் நடக்கும் எரிபொருள் வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் நீரிணைக்கு வடகிழக்கு எல்லையில் ஈரான் அமைந்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் தடை விதித்திருந்தது.
பின்னர், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் கப்பல்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் தவிர மற்ற நாடுகளுக்கான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லலாம் என ஈரான் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வர வேண்டிய சிவாலிக் மற்றும் நந்தா தேவி என்ற இரு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இந்த இரு கப்பல்களிலும் 90,000 மெட்ரிக் டன் எல்பிஜி கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில், 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் வந்துகொண்டிருந்த சிவாலிக் கப்பல், இன்று (மார்ச் 16) மாலை குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சமையல் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
LPG tanker Shivalik reaches Gujarat's Mundra Port after crossing Strait of Hormuz
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.