ஓசூர் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 2 லட்சத்து 54 ஆயிரத்து 40 ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர். தமிழக, கர்நாடக எல்லையான ஜுஜுவாடி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது.
இங்கு வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக பர்மிட் வழங்கவும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ஒரு குழுவினர் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 54 ஆயிரத்து 40-ஐ மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அப்போது பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளரிடம் துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது.