தொகுதிப் பங்கீடு: எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் ஆலோசனை?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் பேசியதாகத் தகவல்...
கூட்டணி விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இடம்பெற்றுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பேசிவந்த டிடிவி தினகரன் திடீரென பாஜகவின் அழைப்பை ஏற்று என்டிஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டுவர தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதற்காக கூட்டணியில் இணைந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடுகளில் இபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் ஒன்றாக பங்கேற்றனர்.
இதையடுத்து இன்று கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று வரும் 17 ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும் ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் முதலானவற்றைக் கண்டித்து மார்ச் 17-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.