தேன்கனிக்கோட்டை அருகே இரவு நேரத்தில் சாலையை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சானமாவு, தளி, ஜவளகிரி, தேன்கனிகோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாகச் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகளிடமிருந்து பொதுமக்களும், விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசூா் நெல்குந்தி கிராமம் அருகே நெமிலேரி பகுதியில் ஒற்றை யானை கடந்த 3 நாள்களாக சாலையில் சுற்றித் திரிகிறது.
கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று வழி மறித்து நிற்பதால் அந்த வழியே வாகனங்களில் செல்லும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீண்ட நேரமாக அந்த யானை சாலையிலேயே சுற்றி வந்ததால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் அவதியடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து அந்த யானையை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டியதால் மக்கள் நிம்மதியடைந்தனா்.