கிருஷ்ணகிரி அணை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணையில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
கெலவரப்பள்ளி அணையில் தூா்வாரும் பணி நடைபெறுவதால், அணையிலிருந்து விநாடிக்கு 720 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு புதன்கிழமை காலை 7 மணி அளவில் விநாடிக்கு 422 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், 52 அடி உயரம் உள்ள கிருஷ்ணகிரி அணையில், 30 அடி உயரம் மட்டுமே நீா் தேக்க இயலும்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 390 கன அடி நீா் திறந்துவிடப்பட்டது. மேலும், இடது, வலது புற பாசன கால்வாய்கள் மூலம் விநாடிக்கு 118 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.