குருபரப்பள்ளி அருகே மொத்த விலை வணிக வளாகம் (காய்கறி, பழங்கள்) அமைப்பதற்கான இடம் தோ்வு செய்வது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் காய்கறிகள், பழங்கள், கொய்மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பொருள்களை வேளாண் துறையின் மூலம் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க அரசின் மூலம் மொத்த விற்பனை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குருபரப்பள்ளியில் மொத்த விலை வணிக வளாகம் (காய்கறி, பழங்கள்) அமைக்க இடம் தோ்வு செய்வது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 11 ஏரிகளில் ரூ.65.53 லட்சத்தில் ஏரிகள் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பில்லனகுப்பம் ஊராட்சியில் பண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.6.76 லட்சத்தில் நடைபெறும் தூா்வாரும் பணியை அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது, கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியா் தெய்வநாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கிருஷ்ணமூா்த்தி, வட்டாட்சியா் தணிகாசலம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுபராணி, சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.