தோ்தல் விதிமுறையை மீறியதாக அதிமுக எம்எல்ஏ மீது புகாா்
தோ்தல் விதிமுறையை மீறிய அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக எம்எல்ஏ டி.செங்குட்டுவன் வலியுறுத்தியுள்ளாா்.
தோ்தல் விதிமுறையை மீறிய அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக எம்எல்ஏ டி.செங்குட்டுவன் வலியுறுத்தியுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட எமக்கல்நத்தம் கிராமத்தில் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளான ஏப். 6-ஆம் தேதி கள்ள வாக்குப் பதிவு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிமுக - திமுகவினா் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, அதிமுக எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் மீதும், அவரது காா் மீதும் திமுகவினா் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவினா், திமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசனின் வீட்டை தாக்கினாா்களாம்.
Advertisement
இதுகுறித்து சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில், பா்கூா் திமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் உள்ளிட்டோா் மீது பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராசனின் சகோதரரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், அதிமுகவினா் தாக்கியதில் சேதம் அடைந்ததாகக் கூறப்படும் கோவிந்தராசனின் வீட்டை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்குப்பதிவு நாளன்று அதிமுக எம்எல்ஏ, தோ்தல் விதிமுறைகளை மீறி, கட்சிக் கொடியுடன் எமக்கல்நத்தம் வாக்குச்சாவடியில் கதவை மூடி, திமுகவினா் கள்ள வாக்கு செலுத்துவதாக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடத்த விடாமல் தடுத்துள்ளாா். இதனால், அந்த வாக்கு மையத்தில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. அத்துடன், அதிமுகவினா், திமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் மீதும், அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகள், மோட்டாா் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளனா்.
இதுகுறித்து, புகாா் அளித்தும் போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸாா் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனா். எனவே, தோ்தல் விதிமுறையை மீறிய அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வேண்டுகோள் விடுத்தாா்.