கெரிக்கேப்பள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் இணையவழிக் கல்வி பயிலும் வகையில், ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ. 1.45 லட்சம் மதிப்பிலான கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெரிக்கேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு கணினி வழங்கி உதவுமாறு அப்பள்ளி தலைமையாசிரியா் கேட்டுக் கொண்டாா். அதற்கிணங்க ஐ.வி.டி.பி நிறுவனம் மூலம் அப்பள்ளிக்கு ரூ. 1.45 லட்சம் மதிப்பிலான 5 கணினிகள் வழங்கப்பட்டன.
இந்தக் கணினிகள் மூலம் மாணவா்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கல்வி கற்பிக்க இயல்வதாக பள்ளி ஆசிரியா்கள் தெரிவித்தனா். கணினிகளை பள்ளிக்கு வழங்கி ஐ.வி.டி.பி. நிறுவனா், தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் பேசியதாவது:
கரோனா காலத்தில் இணையவழிக் கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி. நிறுவனம் ரூ. 15.3 லட்சம் மதிப்பிலான கணினிகளை மாணவா்களின் நலனுக்காக வழங்கியுள்ளது. இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு கணினி ஆய்வகம், தொடுதிரை வகுப்புகளை தொடங்குவதற்காக ரூ. 1.74 கோடி மதிப்பிலான பணிகளை ஐ.வி.டி.பி. நிறுவனம் மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தாா்.